அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளில் வளைகுடா நாடுகள் பங்கேற்க வேண்டும் என்ற அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் (Lindsey Graham) கருத்துக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி தொழிலதிபர் கலாப் அல் ஹப்தூர் (Khalaf Al Habtoor) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஒரு ரகசிய நாடாளுமன்ற விளக்கக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், மத்திய கிழக்கில் அமெரிக்கா மட்டும் தனியாகப் போரிடாது என்றும் குவைத், கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்த நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வது இத்தகைய மூலோபாயக் கூட்டணியின் ஒரு பகுதி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு சமூக வலைதளமான ‘X’-இல் நீண்ட பதிவொன்றின் மூலம் பதிலளித்துள்ள அல் ஹப்தூர், கிரஹாமின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.
அரபு நாடுகளுடன் எந்த ஆலோசனையும் செய்யாமல் எடுக்கப்பட்ட முடிவுகளுக்காக, இந்த பிராந்தியம் ஏற்கனவே பெரும் விலையைக் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். “யார் இந்தப் பிராந்தியத்தை இத்தகைய ஆபத்தான சூழலுக்குள் இழுத்துச் சென்றார்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று அவர் சாடினார்.
“எங்களுக்கு உங்கள் பாதுகாப்புத் தேவையில்லை. எங்களிடமிருந்து உங்கள் கைகளைத் தள்ளி வைத்தாலே போதும்” என்று அவர் அமெரிக்காவைக் குறிப்பிட்டுத் தெரிவித்துள்ளார்.
எத்தகைய கூட்டணிக்காகவும் எமது நாட்டு இளைஞர்களின் உயிரைப் பணயம் வைக்க முடியாது என்றும், எமது மக்களின் உயிரை விட மேலானது எதுவும் இல்லை என்றும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது பாதுகாப்புக்காக அல்ல, அது ஒரு பெரும் வணிகம் மட்டுமே என்று அவர் விமர்சித்தார். பிராந்தியத்தில் ஏற்படும் மோதல்கள் சர்வதேச ஆயுதத் தொழில்துறைக்கே லாபத்தை ஈட்டித் தருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
செனட்டர் கிரஹாம் அமெரிக்க மக்களின் நலனை விட இஸ்ரேலின் நலனுக்கே முன்னுரிமை அளிப்பதாகக் கூறிய அல் ஹப்தூர், வளைகுடா நாடுகள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையையே விரும்புவதாகவும், ராணுவ நடவடிக்கைகளை விட ராஜதந்திர ரீதியிலான தீர்வுகளுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது, குறிப்பாக வளைகுடா நாடுகள் தங்களின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் வெளிநாட்டினரின் தலையீட்டை விரும்புவதில்லை என்பதை இக்கருத்துக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
