இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ‘UNLEASH 002’ எனும் கலப்புத் தற்காப்புக் கலை (MMA) மற்றும் முய் தாய் (Muay Thai) போட்டித் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி நீர்கொழும்பு கிராண்டீசா (Grandeeza) ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
நீர்கொழும்பில் நடத்தப்படும் முதலாவது தொழில்முறை தற்காப்புக் கலை இரவுப் போட்டியான இதில் சுமார் 1000 பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் இலங்கையின் முன்னணி வீரர்களுடன் மாலைதீவைச் சேர்ந்த இரு வளர்ந்து வரும் வீரர்களும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன் இரண்டு சம்பியன் பட்டங்களுக்கான (Title bouts) மோதல்களும் இடம்பெறவுள்ளன.
விஜய செய்தி நிறுவனத்தின் டெய்லி மிரர் (Daily Mirror) பத்திரிகை இப்போட்டித் தொடருக்கான உத்தியோகபூர்வ ஊடக அனுசரணையாளராகச் செயற்படுகிறது.
MMA, முய் தாய் மற்றும் ஜியு-ஜிட்சு (Jiu-Jitsu) ஆகிய தற்காப்புக் கலைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் தொழில்முறை ஊக்குவிப்பு நிறுவனமாக UNLEASH செயற்படுகிறது. இலங்கையில் முறையான, நம்பகமான மற்றும் நிலையான தற்காப்புக் கலை சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்நிறுவனம், வீரர்களின் மேம்பாடு மற்றும் நீண்டகாலத் துறைசார் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறது.
கடந்த 2025 ஜூன் மாதம் கொழும்பு றோயல் MAS அரங்கில் நடைபெற்ற UNLEASH 001 நிகழ்வு பெரும் வெற்றியைப் பெற்றது. சுமார் 700 நேரடிப் பார்வையாளர்களையும் 7000 இணையவழிப் பார்வையாளர்களையும் ஈர்த்த அந்த நிகழ்வு, தொழில்முறை தற்காப்புக் கலைகளுக்கு இலங்கையில் உள்ள வரவேற்பை உறுதிப்படுத்தியது.
உயர்மட்டப் போட்டிகளைத் தவிர்த்து, ‘Road to UNLEASH (RTU)’ திட்டத்தின் ஊடாக ஆரம்பநிலை வீரர்களையும் இந்நிறுவனம் ஊக்குவித்து வருகிறது. கொழும்பிற்கு அப்பால் யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
உலகளவில் கோடிக்கணக்கான டொலர் பெறுமதியான இத்துறையில், இலங்கையைப் பிராந்திய மட்டத்தில் நிலைநிறுத்துவதே UNLEASH நிறுவனத்தின் இலக்காகும். குறிப்பாக, 2035ஆம் ஆண்டளவில் UFC (Ultimate Fighting Championship) போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கக்கூடிய வீரர்களையும் நடுவர்களையும் உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, UNLEASH ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ரோஹான் ஸ்பெல்டெவிண்டே கருத்துத் தெரிவிக்கையில்:
“தற்காப்புக் கலைகளுக்கு பெரும் வரவேற்பு இருந்தபோதிலும், இலங்கையில் விளையாட்டு அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய சம்மேளனம் ஒன்று தற்போது இல்லை. எனவே, விரைவில் ஒரு தேசிய சங்கத்தை நிறுவி உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.”
மேலும், தெற்காசிய தற்காப்புக் கலை சம்பியன்ஷிப் போட்டியை நடத்துவது தொடர்பிலான முதற்கட்டப் பேச்சுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
